இந்திய கிரிக்கெட் அணி, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸுக்கு விளையாடச் சென்றது. அங்கு தனக்கு நேர்ந்த அனுபவத்தை டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.
அவர் கூறும்போது, ‘நானும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் பொல்லார்டும் நண்பர்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் 2010 ம் ஆண்டில் இருந்து இருக்கிறார். நான் 2015-ல் இருந்து இருக்கிறேன். டிரெஸ்சிங் ரூமில் எனக்கு டிப்ஸ் வழங்குபவர் அவர்தான். இதையடுத்து நாங்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். அவர் எனக்கு சகோதரர் போன்றவர். வெஸ்ட் இண்டீஸ் சென்றதும் அவர் என்னை தனியாக விடவில்லை. அவரே எல்லா இடத்துக்கும் அழைத்துச் சென்றார். அவருடனேயே என்னை எப்போதும் வைத்துக்கொண்டார்.
ஒரு நாள், அவர் போலீஸ் அதிகாரியை அழைத்தார். அவர் என்னை கைது பண்ண வந்தார். எனக்கு திக் என்றது. இந்திய அணியை தொடர்பு கொள்ள நினைத்தேன். தவறு ஏதும் பண்ணவில்லை, ஏன் என்னை கைது செய்ய வேண்டும்? என்று குழம்பினேன். பிறகுதான் தெரிந்தது, அந்த அதிகாரி பொல்லார்டின் நண்பர் என்பது. அது என்னை ஏமாற்ற செய்யப்பட்ட நாடகம் என்பது பிறகு தெரிந்தாலும் நான் பயந்தது உண்மைதான்’ என்றார்.