ஒரு தோல்வி வீரரின் நம்பிக்கையை சீர்குலைத்தால், அவர் விளையாடுவதற்கு தகுதியானவர்கள் அல்ல என்று வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதனால் இந்திய அணி மீது அதிக அளவில் விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நாளைமறுநாள் (13-ந்தேதி) தொடங்குகிறது.
இதற்கான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முதல் போட்டியில் அறிமுகமான பும்ரா, ஒரு தோல்வியில் தன்னம்பிக்கை சீர்குலையும் என்றால், விளையாடுவதற்கு தகுதியே இல்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘ஒரு போட்டியில் தோல்வியடைந்ததால் நம்பிக்கை சீர்குலையாது. ஒரு வீரருக்கு அப்படி நிகழ்ந்தால், அவர் விளையாடுவதற்கே தகுதியானவர் அல்ல. தவறில் இருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு, முன்னேறுவதை உருவாக்க வேண்டும். தவறு செய்யாத எந்தவொரு கிரிக்கெட் வீரரும் இல்லை.
எனக்கு இது சிறந்த முதல் டெஸ்ட். இதில் இருந்து நான் கற்றுக் கொண்டேன். ஏனென்றால், இதற்கு முன் நான் தென்ஆப்பிரிக்காவில் விளையாடியது கிடையாது. அதனால் கேப் டவுன் டெஸ்டில் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். தற்போது அதில் இருந்து முன்னேறி, 2-வது டெஸ்டின் மீது கவனம் செலுத்து வேண்டிய நேரமிது’’ என்றார்.