பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானை பதம் கார்க்க காத்திருக்கும் இந்தியா
பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய வங்கதேச அணி, 38.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 256 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக அந்த அணியின் அப்துல் மாலிக் 108 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி சார்பில் துர்கா ராவ் 3 ஓவர்களில் 20 ரன்களை விட்டுகொடுத்து 3 மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கணேஷ் பாய் முகுட்கர் 112 ரன்களும், தீபக் மாலிக் 53 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் இந்திய அணி எளிதாக தனக்கான இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணி, வங்கதேசத்துடனான அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் இலங்கை அணியை 156 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வரும் 20ம் தேதி நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்திய அணி, தனது பரம எதிரியாக பாவிக்கப்படும் பாகிஸ்தான் அணியை இறுதி போட்டியில் எதிர்கொள்ள உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.