தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10-வது தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த ஐபில்-யின் லீக் போட்டிகளின் முடிவில் 18 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது புனே அணி. முதல் இடத்தில் மும்பை இந்தியன்ஸ், 3வது இடத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் 4வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் இருக்கிறது.
இந்த தொடரின் தொடக்கத்தின் தொடர் வெற்றிகளால் துவண்டு போன புனே அணி, பிளே-ஆப் வாய்ப்பு கனவாகவே இருந்தது. ஆனால், அதன் பிறகு எதிரே வந்த தடைகளை உடைத்து தற்போது புள்ளி பட்டியலில் 2வது இடத்தில உள்ளார்கள்.
இந்த ஐபில் தொடங்குவதற்கு முன்னதாகவே நட்சத்திர வீரர்களாகிய ரவிச்சந்திரன் அஸ்வின், மிட்சல் மார்ஷ் ஆகியோரை இழந்து விட்டது.
கடந்த ஐபில் சீசனில் 5 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில இருந்த அணி, ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ராகுல் திருப்பதி, இம்ரான் தாஹிர், ஜெயதேவ் உனட்கட் ஆகியோரின் விடாமுயற்சியால் இந்த ஐபில்-இல் 2வது இடத்திற்கு முன்னேறியது.
காயம் காரணமாக விளையாடாத அஸ்வினுக்கு பதிலாக இம்ரான் தாஹிர் பட்டையை கிளப்பினார். அவர் விளையாடிய 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். புனே அணிக்கு நட்சத்திர அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ், புனே அணிக்காக பல போட்டிகளை வென்றுள்ளார். ஆனால் வருத்தம் என்னவென்றால் புனே அணிக்காக பிளே-ஆப் சுற்றில் விளையாட மாட்டார். இங்கிலாந்துக்கு தென்னாபிரிக்காவுடன் ஒருநாள் தொடரில் விளையாட போவதால், இதனால் பென் ஸ்டோக்ஸ் ஊருக்கு கிளம்பினார்.
பென் ஸ்டோக்ஸ் இல்லாதது பற்றி வருத்தமாக இருக்கிறது என ரஹானே கூறினார்.
“நாங்கள் பென் ஸ்டோக்ஸை கண்டிப்பாக இழப்போம். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நன்றாக விளையாடினார் ஸ்டோக்ஸ். லாக்கி பெர்குசன் மற்றும் கவாஜா என வெளிநாட்டு வீரர்களை வைத்துள்ளோம். இந்திய பந்து வீச்சாளர்கள் தான் எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம்,” என ரஹானே கூறினார்.
“எங்கள் அணியில் இருக்கும் இந்திய பந்துவீச்சாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள் தான், ஆனால் சிறப்பாக விளையாடுகிறார்கள். ஸ்மித், திருப்பதி, தோனி என அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் ஒரு அணியாக எங்கள் திறமையை வெளிப்படுத்தினோம். இனி வரும் பிளே-ஆப் போட்டிகளிலும் எங்கள் திறமையை .வெளிப்படுத்துவோம்,” எனவும் கூறினார்.
தகுதி சுற்று ஒன்னில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கிறது புனே அணி. லீக் போட்டிகளில் இரண்டு முறையும் வென்றது புனே. இதனால், அடுத்த போட்டியில் புனே அணியின் கை ஓங்கியிருக்கிறது என கூறலாம்.