கொஞ்சமாச்சு கோவத்த குறைச்சிக்கங்க கோஹ்லி… அசாரூதின் அட்வைஸ்
இந்திய கிரிகெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி தன்னுடைய கோவத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் இழந்துள்ளது.
இரண்டாவது போட்டிக்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி கலந்து கொண்டார். இதில் தன்னிடம் இந்திய அணியை கிண்டலடிக்கும் வகையில் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கோஹ்லி கடு கடு முகத்துடன் கோவமாக பதிலளித்தார்.
கோஹ்லி கோவமாக அந்த பத்திரிக்கையாளருக்கு பதில் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து கோஹ்லிக்கு ஆதரவாக சிலர் பேசினாலும், பெரும்பாலானோர் கோஹ்லி தனது கோவத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்றே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீனும், கோஹ்லி தனது கோவத்தை குறைத்து கொண்டு, கூலாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அசாருதீன் “ஒரு கேப்டனாக தான் எடுத்த முடிவு சரியானது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், அதன் காரணமாகவே கோஹ்லி செய்தியாளர் சந்திப்பில் கோவமாக நடந்து கொண்டார் என்று நான் நினைக்கிறேன். என்ன இருந்தாலும் இது சரியான முறையல்ல. பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள், அது அவர்களது கடமை, பத்திரிக்கையாளர்களின் சில கேள்விகள் பிடிக்கவில்லை என்றால் கோஹ்லி புறக்கணித்து விடலாம், அது அவரது உரிமை, ஆனால் அதற்காக கோவமாக பேசுவது ஏற்புடையது அல்ல. கோஹ்லி விரைவில் இதனை கற்றுக்கொண்டு கூலாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.