தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புவனேஷ்குமார் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான பேட்டிங் காரணமாக படுதோல்வி அடைந்தது. 208 ரன்களை அடிக்க முடியாமல் 135 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனால், முதல் போட்டியில் ரகானேவை எடுக்காதது குறித்தும், அதிக அனுபவம் இல்லாத ஷிகர் தவானை சேர்த்தது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தது. ரகானே இடம்பெறாதது குறித்து முன்னாள் வீரர்களே கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 40 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து அந்த அணி நிதானமாக விளையாடி வருகிறது.
இரண்டாவது போட்டியிலும் அணியில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு, பேட்டிங்கை வெளிப்படுத்திய புவனேஷ்குமார் இடம்பெறாதது குறித்து பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
புவனேஷ்குமார் இடம்பெறாததில் உள்ள மர்மம் புரியவேயில்லை என்று கிண்டல் அடித்துள்ளனர். அதேபோல், இந்தப் போட்டியிலும் ரகானே இடம்பெறாதது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும், இது குறித்து பேசிய விரேந்தர் சேவாக் விராட் கோலியும் அடுத்த போட்டியில் ஆடவில்லை எனில் அவர் வெளியே உட்கார வேண்டும் என கூறியுள்ளார்.
ஒரு டெஸ்ட்டில் ஆடாத தவானை வெளியே தள்ளியதையும், காரணமே இல்லாமல் புவனேஸ்வர் குமாரை வெளியே தள்ளியதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். அதேபோல இந்த டெஸ்ட் போட்டியில் கோலி ஒழுங்காக ஆடவில்லை எனில் அடுத்த போட்டியில் அவரே அணியை விட்டு வெளியே உட்கார வேண்டும்.
இவ்வாறு சேவாக் கூறினார்