இந்தியாவுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது ; ரபாடா
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்ற விரும்புவதாக தென் ஆப்ரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், மோசமான பேட்டிங் காரணமாக இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்த இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.
இந்நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்பெர்க்கில் துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்ரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ரபடா “இந்திய கிரிக்கெட் அணி மீது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் மதிப்பு உள்ளது. எங்கள் மண்ணில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவ்வளவு துல்லியமாக பந்துவீசுவது எங்களுக்கே ஆச்சரியமாக உள்ளது. ஆனால் இந்திய அணியுடனான இந்த டெஸ்ட் தொடரை நாங்கள முழுமையாக கைப்பற்றி, இந்திய அணியை வொயிட் வாஷ் செய்யவே விரும்புகிறோம், அதற்காக மூன்றாவது போட்டியிலும் கடுமையாக முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.