அடுத்த உலகக்கோப்பை தொடரும் ரத்து; ரசிகர்கள் கவலை
கொரோனா தாக்கம் காரணமாக பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2022ம் ஆண்டு வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் யூஹானில் முதலில் பரவிய கொரோனா என்னும் கொடிய வைரஸானது, படிப்படியாக உலகம் முழுவதும் பரவி கடந்த நான்கு மாதத்திற்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையும் புறட்டி போட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கதிற்கு கிரிக்கெட் விளையாட்டு மட்டும் விதிவிலக்கா என்ன..? கொரோனாவின் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நடைபெற இருந்த பல்வேறு முக்கிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டும் தள்ளி வைக்கப்பட்டும் வருகிறது. மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற இருந்த டி.20 உலகக்கோப்பை 2022ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் 2022ம் ஆண்டு வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நியூசிலாந்தில் 50 ஓவர் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வரும் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது 2022 ஆண்டிற்கு உலகக் கோப்பை தொடரை ஒத்திவைத்துள்ளோம். கொரோனா அச்சுறுத்தல் தான் இதற்கு காரணம்’ என்று ஐ.சி.சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 50 ஓவர் மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாட முன்னதாகவே தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள அணிகள் தகுதி போட்டிகளின் ரிசல்ட்டை பொறுத்தே உலக கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.