இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவைக் களமிறக்குவது குறித்து பரிசீலிக்கலாம். ஆனால் ராகுல் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது என்று தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டு இருந்த ரோஹித் சர்மாவுக்கு ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு அளித்த போதிலும் அவர் 13, 6, 44, 38 ரன்கள் மட்டுமே சேர்த்து மோசமான பேட்டிங் ஃபார்மை நிரூபித்தார்.
இதுகுறித்து இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது:
”இந்திய அணியின் தேர்வுக்குழு மே.இ.தீவுகள் தொடர் முடிந்த பின் பேசி இருக்கிறோம். அடுத்துவரும் தொடரில் உறுதியாக ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்வது குறித்து பரிசீலிப்போம். அப்போது ரோஹித் சர்மா குறித்துப் பேசுவோம்.
அதேசமயம், கே.எல். ராகுலும் மிகச்சிறந்த திறமை உடையவர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது கடினமான நேரமாக இருக்கிறது. அவரின் பேட்டிங் ஃபார்ம் இப்போது கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது. அதிகமான நேரம் விக்கெட்டை நிலைப்படுத்தும் வகையில் ராகுல் விளையாட வேண்டும். தொடர்ந்து பேட்டிங்கில் பயிற்சி பெற வேண்டும்.
குல்தீப் யாதவ், மற்றும் யஜுவேந்திர சாஹல் இருவரையும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்குத் தயார் செய்யும் விதத்தில் இருக்கிறோம்.
சுழற்பந்துவீச்சில் புதுமைகளையும் புதிய வீரர்களையும் அறிமுகம் செய்யும் வகையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்”.
இவ்வாறு பிரசாத் தெரிவித்தார்.
அபிமன்யு ஈஸ்வரன்
அபிமன்யூ ரங்கநாதபரமேஸ்வரன் ஈஸ்வரன். சுருக்கமாக அபிமன்யூ ஈஸ்வரன். இவர் தான் பெங்கால் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்.
இந்திய ஏ அணி வீரரான 23 வயது அபிமன்யு, கடந்த சில வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துக் கவனம் ஈர்த்துள்ளார். பெங்கால் அணிக்காக 50 முதல் தர ஆட்டங்களில் விளையாடி, 12 சதங்களும் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார். ரஞ்சி போட்டியில் முக்கியமான போட்டிகளில் சதங்கள் எடுத்தது, இந்திய ஏ அணியில் இடம், பெங்கால் கேப்டன் என 23 வயதுக்குள் படிப்படியாக முன்னேறியுள்ளார் அபிமன்யூ ஈஸ்வரன். அடுத்ததாக இந்திய அணியின் கதவையும் சமீபகாலமாகத் தட்டிக்கொண்டிருக்கிறார். அந்த பொன்னான வாய்ப்பும் வெகுதொலைவில் இல்லை.
அபிமன்யூவின் தந்தை ஈஸ்வரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தாய் பஞ்சாபி. உத்தரகண்டில் வசித்து வரும் இவர்களுடைய குடும்பம், அபிமன்யூவின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக அவரை கொல்கத்தாவுக்கு அனுப்பியது. ஆரம்பத்தில் பள்ளி மாணவராக டெஹ்ராடுனில் உள்ள தனது தந்தையின் நேஷனல் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட்டில் பயின்ற அபிமன்யூ, 9 வயதுக்குப் பிறகு கொல்கத்தாவில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். வெளிமாநில வீரர்களை பெங்கால் அணியில் சேர்ப்பதற்கான விதிமுறைகள் இலகுவாக இருந்ததால் அவருடைய தந்தை கொல்கத்தாவைத் தேர்ந்தெடுத்தார். மேலும் தமிழ்நாடு போல பெங்காலிலும் கிரிக்கெட் அமைப்பு பலமாக இருந்தால் மகனின் வளர்ச்சிக்கு பெங்கால் மாநிலம் பொருத்தமாக இருக்கும் என நம்பினார் ஈஸ்வரன்.