இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று முதல் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 205 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், லாரன்ஸ் 46 ரன்களும் குவித்துள்ளனர். இந்திய பவுலர்கள் அக்சர் பட்டேல் 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் மற்றும் சிராஜ் 2 விக்கெட்கள் என வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 24 ரன்கள் குவித்து 1 விக்கெட் இழந்திருந்தது. அப்போது புஜாரா மற்றும் ரோகித் விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, இன்று இரண்டாவது நாளில் ரோகித் மற்றும் புஜாரா களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்தனர். ஆனால் இங்கிலாந்து பவுலர் ஜாக் லீச் புஜாராவின் விக்கெட்டை வீழத்தினார். புஜாரா 66 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்களுடன் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலியும் வந்த வேகத்தில் ஸ்டோக்ஸிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் ரஹானே மற்றும் ரோகித் ஜோடி சேர்ந்தனர். 27 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி வந்த ரஹானேவின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தினார். அடுத்தாக பண்ட் களமிறங்கினார். தனியாளாக விளையாடி வந்த ரோகித் 49 ரன்கள் குவித்து தனது அரைசத்தை பூர்த்தி செய்ய காத்திருந்த போது பென் ஸ்டோக்ஸ் ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனால் ரோகித் ஒரு ரன்னில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ய முடியாததால் கவலையுடன் திரும்பினார். தற்போது அஸ்வின் மற்றும் பண்ட் களத்தில் விளையாடி வருகின்றனர். இதுவரை இந்திய அணி 124 ரன்கள் குவித்து 5 விக்கெட்களை இழந்திருக்கிறது. இந்திய அணி முன்னிலை பெற இன்னும் 81 ரன்கள் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.