அடுத்த 2019 உலகக்கோப்பைக்காக இந்திய அணியை பலப்படுத்த பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றனர். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ஏதாவது மாற்றம் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
இலங்கை தொடருக்கு எதிராக மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை சில போட்டிகளில் விளையாடவைத்து முயற்சி செய்தார்கள். ஆஸ்திரேலியா தொடரிலும் இது போல் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த முறை சில சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
உலககோப்பைக்கு ஒரு அணிக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் தான் தேவை. ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இந்த 5 சீனியர் வீரர்கள் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
இஷாந்த் சர்மா
தற்போது இந்திய அணியில் இருக்கும் சீனியர் பந்துவீச்சாளர்களில் ஒருவர் தான் இஷாந்த் சர்மா. ஒருநாள் போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் படி ஜொலிக்கவில்லை என்றாலும், அவருடைய அனுபவம் இந்திய அணிக்கு தேவை. 2019 உலககோப்பைக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து செல்லவுள்ளதால், இந்திய அணியில் இஷாந்த் சர்மா இருப்பது இந்திய அணிக்கு பலம் தான். கடந்த இரண்டு முறை இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடர் விளையாடிய இந்திய அணியில் இருந்த இஷாந்த் ஷர்மா, தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணியில் இஷாந்த் ஷர்மா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமித் மிஸ்ரா
ராசி இல்லாத கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தான் இந்திய அணியின் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா. அவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்தும், ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இருந்ததால், நிரந்தரமாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.ஆனால், ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறார்.
கடந்த ஆண்டு நியூஸிலாந்துடன் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், அதிக விக்கெட் எடுத்தவர் அமித் மிஸ்ரா தான். ஆனால், அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, இலங்கை தொடர் என எந்த தொடரிலும் அவர் இடம் பிடிக்கவில்லை. அவரது அனுபவம் வைத்து பார்த்தால், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
தினேஷ் கார்த்திக்
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இலங்கை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறாதது தான் ஆச்சரியம். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக், ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு முன்பு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக், ஒரு அரைசதம் அடித்து அசத்தினார். அதற்கு பிறகு ஒரு டி20 போட்டியில் 48 ரன் அடித்தார்.
ரஞ்சி டிராபி, இந்தியன் பிரீமியர் லீக், விஜய் ஹசாரே டிராபி, துலீப் டிராபி என அனைத்து தொடரிலும் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்கவில்லை. தற்போது, இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் திணறுவதால், தினேஷ் கார்த்திக் வந்தால் இந்திய அணியின் பலம் கூடும்.
யுவராஜ் சிங்
ஐசிசி தொடர் என்றாலே இந்திய அணியின் யுவராஜ் சிங்குக்கு குதூகலம் தான். ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடும் யுவராஜ் சிங், 2019 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்புகள் உள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அதிவேகத்தில் அரைசதம் என மரண பார்மில் இருந்தார். அவரிடம் இன்னும் பல வித்தைகள் இருக்கிறது. இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் ஏமாற்றுவதால், அந்த இடத்திற்கு யுவராஜ் சிங் தான் சரி.
சுரேஷ் ரெய்னா
ஒருகாலத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரராக இருந்த சுரேஷ் ரெய்னாவுக்கு இப்போது அணியில் இடம் கிடைப்பதே பெரிய பாடாக இருக்கிறது. கடைசியாக 2015 அக்டோபர் மாதம் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். இங்கிலாந்து டி20 தொடரில் 104 ரன் அடித்த சுரேஷ் ரெய்னா, ஐபில்-இல் 14 போட்டிகளில் 442 ரன் அடித்தார். அவர் எப்படியா பட்ட பார்மில் இருக்கிறார் என்று தெரிய, இதுவே போதும். இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் ஏமாற்றுவதால், சுரேஷ் ரெய்னா அணியில் இடம் பிடித்தால், இந்திய அணிக்கு பலம் கூடும்.