விஜய் ஹசாரே தொடரில் அசுரவேகத்தில் சதம் அடித்ததன் மூலம், இளம் வீரரான அபிஷேக் ஷர்மா விராட் கோலியின் பழைய சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய நாளுக்கான ஒரு போட்டியில் மத்திய பிரதேச அணியும் பஞ்சாப் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற மத்தியபிரதேச அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மத்தியபிரதேச அணிக்கு வெங்கடேஷ் ஐயர் 198 ரன்களும், ஆதித்யா ஸ்ரீவஸ்டாவா 88* ரன்களும் எடுத்து கை கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த மத்தியபிரதேச அணி 402 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 403 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா 49 பந்துகளில் 9 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும், பின்வரிசையில் வந்த வீரர்கள் சோபிக்க தவறியதாலும், இலக்கு சாத்தியமில்லாதது என்பதாலும் பஞ்சாப் அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்தபோட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்திருந்தாலும், பஞ்சாப் அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
இந்த போட்டியில் 42 பந்தில் சதமடித்ததன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்ததில் 2 வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 2010ம் ஆண்டு பரோடா அணிக்காக ஆடிய யூசுஃப் பதான் 40 பந்தில் அடித்த சதம்தான், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய வீரரின் அதிவேக சதம்.
யூசுஃப் பதானுக்கு அடுத்த இடத்தில் அபிஷேக் ஷர்மா உள்ளார். 50 பந்தில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் 3ம் இடத்திலும், 52 பந்தில் சதமடித்த விராட் கோலி 4ம் இடத்திலும் உள்ளனர்.
அபிஷேக் ஷர்மா ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.