2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை தொடரை வெல்வதற்கான சிறந்த அணியாக இந்த அணி இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஜாம்பவான் ஆடம் கில்கிரிஸ்ட் கணித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது இருந்தே ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் முழு முனைப்புடன் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்வதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர்களை வெளியேற்றிவிட்டு இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, தீபக் சஹர், ராகுல் சஹர், கலீல் அகமது ஆகியோரை பயன்படுத்தி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதேநேரம் ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளையும் துவம்சம் செய்து தொடரை கைப்பற்றியது. டி20 தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இத்தொடரில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
ஒவ்வொரு அணியின் அடுத்தடுத்த செயல்பாடுகளும் உலகக்கோப்பையை வெல்வதற்கான முயற்சி என தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல எந்த அணி சரியாக இருக்கும் என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் கில்கிறிஸ்ட்.
அவர் தெரிவித்ததாவது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முதல்முறையாக மிகச்சிறந்த வீரர்களை கொண்ட அணியை தேர்ந்தெடுத்திருக்கிறது. தற்போதைய ஆஸ்திரேலிய அணி மைதானத்தின் போக்கை கணித்து அதற்கு ஏற்றார்போல் ஆடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை ஆஸ்திரேலியா எதிர்கொண்ட விதம் மிக சிறப்பாக இருந்தது.
இதனால் அடுத்த ஆண்டு வரவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பையை ஆஸ்திரேலிய வெல்வதற்க்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன் என்றார்.