இரண்டு மூத்த இந்திய வீரர்களின் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மிகுந்த அனுபவம் மிக்க வீரர்களாக கருதப்படும் ரஹானே மற்றும் புஜாரா இருவரின் சமீபத்திய செயல்பாட்டினால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். 2021ல், 23 இன்னிங்ஸில் விளையாடிய ரஹானே, 479 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். இவரது சராசரி 20.82 ஆகும்.
நடந்து முடிந்த தென்ஆப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரின்போது, 6 இன்னிங்சில் வெறும் 136 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதன் சராசரி 22.66 மட்டுமே.
டெஸ்ட் போட்டிகளில் 3வது வீரராக களமிறங்கும் புஜாரா, 2021 ஆம் ஆண்டு விளையாடிய 26 இன்னிங்சில் 702 ரன்கள் அடித்திருந்தார். இவரது சராசரி 28.08 ஆகும். இதில் ஆறு அரை சதங்களும் அடங்கும். நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரின் போது, 6 இன்னிங்சில் 124 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதன் சராசரி 20.66 மட்டுமே.
ரஹானே மற்றும் புஜாரா இருவரும் தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இவர்களின் ஒப்பந்தத்தை குறைக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலையிட்டு வீரர்களின் முக்கியத்துவம் மற்றும் இவர்களை வைத்து வரும் ஆண்டில் அணியின் திட்டம் ஆகியவற்றை எடுத்து சொன்னால் மட்டுமே தொடர்ந்து அதே ஒப்பந்தத்தில் இருவரும் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்தத்தில் பல அடுக்குகளை கொண்டிருக்கிறது. ஏ+, ஏ, பி மற்றும் சி ஆகியனவாகும். ஏ+ பிரிவில் இருக்கும் வீரர்கள் முதல் சி பிரிவில் இருக்கும் வீரர்கள் வரை முறையே 7 கோடி, 5 கோடி, 3 கோடி மற்றும் 1 கோடி என வருடாந்திர ஒப்பந்தப்பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது ரஹானே மற்றும் புஜாரா இருவரும் பிரிவு-ஏ ஒப்பந்தத்தில் இருக்கின்றனர். இவர்களின் ஒப்பந்தம் குறைக்கப்பட்டு, விரைவில் பிரிவு-சி அளவிலான ஒப்பந்தத்திற்கு தள்ளப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ, ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் செயல்படும் விதத்தை வைத்து மட்டுமே அடுத்த ஆண்டிற்கு எந்த நிலையில் அவர்களை ஒப்பந்தம் செய்யலாம் என முடிவு செய்யும். இதன் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் இவர்கள் இருவரும் அதிலும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்பதால், இத்தகைய முடிவினை எடுத்திருக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.