துபாயில் நேற்று நடந்த ஆசியக் கோப்பை தொடரில் முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடையச்செய்தது வங்கதேசம் அணி.
வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹ்மானின் அற்பதமான சதம், காயம் ஏற்பட்ட நிலையிலும் ஒரு கையால் பேட் செய்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமான தமிம் இக்பால் ஆகியோர் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.
வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் 150 பந்துகளில் 144 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு நாள் போட்டியில் அவரின் சிறந்த ரன்குவிப்பாகவும், 6-வது சதமாகவும் இது அமைந்தது. இதில் 11 பவுண்டர்களும், 4 சிக்ஸர்களும் அடங்கும். இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இவருக்கு உறுதுணையாக பேட் செய்த மிதுன் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச வீரர்கள் 6 பேரும் விக்கெட்டுகளை வீழ்த்தியது முத்தியாப்பானதாகும். மோர்தாஸா, ரஹ்மான், ஹசன் மீராஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மோடன் ஹூசைன், ருபெல் ஹூசைன், சாஹில் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
அதேசமயம் இலங்கை அணிக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பிய மலிங்கா பந்துவீச்சில் அசத்தலாகச் செயல்பட்டு தான் இன்னும் சர்வதேச போட்டிகளுக்குத் தகுதியாக இருக்கிறேன் என்பதை நிரூபித்தார். 10 ஓவர்கள் வீசி 2 மெய்டன்கள், 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மலிங்கா. கடைசியாக 2017, செப்டம்பரில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடிய மலிங்கா ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு களமிறங்கி தனது இருப்பை நிரூபித்துள்ளார்.
ஆனால், மலிங்கா தவிர இலங்கையின் மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பந்துவீசவில்லை. பேட்டிங் பந்துவீச்சைக் காட்டிலும் மோசமாக இருந்தது. தங்களுக்கும் பேட்டிங்குக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் சென்றனர்.
இலங்கை அணியில் மூத்த வீரர்கள் ஓய்வுக்குப் பின் அந்த மிகமோசமாக தடுமாறி வருகிறது என்பதற்கு இந்தப் போட்டியே ஆகச்சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
22 ரன்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை அணி 60 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்தது. 38 ரன்கள் சேர்ப்பதற்கு அடுத்த 4 விக்கெட்டுகளை இழந்தது. 60 ரன்களுக்கு 5-வது விக்கெட்டையும், அடுத்த 64 ரன்களுக்கு மீதிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து மோசமான தோல்வியை பதிவு செய்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.3 ஓவர்களில் 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 262 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை சேர்த்த மிகக் குறைவான ஸ்கோர் இதுவாகும்.
மலிங்காவின் ஆவேசமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச பேட்ஸ்மேன்கள் லிட்டன் தாஸ், சஹிப் அல் ஹசன் தொடக்கத்திலேயே டக்அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். மற்றொரு வீரர் தமிம் இக்பால் கையில் காயம் ஏற்பட்டு ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம், மிதுன் ஆகியோர் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். மிதுன் 52 பந்துகளில் அரைசதம் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 131 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அதன்பின், களமிறங்கிய வங்கதேச வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். முகமதுல்லா(1), மோடக் ஹூசைன்(1), ஹசன் மிராஸ்(15), மோர்தாஸா(11), ஹூசைன்(2), ரஹ்மான்(10) என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
ஆனால், நிதானமாக பேட்செய்த முஷ்பிகுர் ரஹிம் 123பந்துகளில் சதம் அடித்தார். 9 விக்கெட்டுகளை வங்கதேச அணி இழந்தபோதிலும், முஷ்பிகுர் ரஹிம் சதமடித்து நல்ல பார்மில் இருந்தார். ஆனால், காயம் காரணமாக ஓய்வில் இருந்த திமிம் இக்பால் கையில் போடப்பட்டிருந்த கட்டை கழற்றிவிட்டு முஷ்பிகுர் ரஹிமுக்கு துணையாக விளையாடக் களமிறங்கினார்.
ஒரு கையால் பேட் செய்து, பந்தை ஸ்ட்ரோக் வைத்த அவரின் பேட்டிங் திறமை அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரின் ஒத்துழைப்பால், வங்கதேச அணி கூடுதலாக 32 ரன்கள் சேர்க்க முடிந்தது. சிறப்பாக பேட் செய்த முஷ்பிகுர் ரஹிம் 144ர ன்களில் ஆட்டமிழந்தார்.
இலங்கை தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டுகளையும், டி சில்வா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
262 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி பேட்டிங்கில் சொதப்பியது. 35.2 ஓவர்களில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி வீரர்களின் அதிகபட்ச பாட்னர்ஷிப் ரன்களே 8-வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட 27 ரன்கள்தான். மிக மோசமான பேட்டிங்கை இலங்கை பேட்மேன்கள் வெளிப்படுத்தினார்கள்.
தொடக்க வீரர் உபுல் தாரங்கா சிக்ஸர்,2 பவுண்டரிகள் அடித்து 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குஷல் மெண்டிஸ் டக்அவுட்டில் வெளியேறினார். 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 3-வது வீரராக களமிறங்கிய தனஞ்செயா டக்அவுட்டிலும், குஷல் பெரேரா(11),கேப்டன் மாத்யூஸ் (16), சனகா(7) பெரேரா(6) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே இலங்கை அணி சேர்த்தது.
8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பெரேரா 29 ரன்களும், லக்மால் 20 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதுதான் அதிகபட்ச பாட்னர்ஷிப்பாகும். 35.2 ஓவர்களில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.