2021 டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அந்தஸ்தை இழக்குமா இந்தியா? பிசிசிஐ விளக்கம்!
2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்தியா நடத்த இயலாத சூழல் உருவாகி வருவதாக வெளியான தகவல்களுக்கு பிசிசிஐ தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமல் தடைபட்டு கிடக்கின்றன. மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் நடக்காததால் பிசிசிஐ-க்கு சுமார் 4000 கோடி ருபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தவுடன் இரு நாட்டுடனான தொடரை தள்ளிவைத்துவிட்டு ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டு வருகிறது.
ஆனால், அதே காலகட்டமான அக்டொபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படவிருக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டில் நடத்தப்படவுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட தேதியில் டி20 உலகக்கோப்பையை நடத்த இயலுமா? என ஏனைய உறுப்பினர் வாரியங்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் திட்டத்தின்படி இந்தியாவில் நடத்தவேண்டும். ஐசிசி விதிமுறைப்படி போட்டியை நடத்தும் நாடு போட்டியை நடத்துவதற்காக ஆகும் செலவிற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்.
ஆனால், மத்திய அரசு தற்போதுவரை வரி விலக்கிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும் 2016ஆம் ஆண்டிலும் இதேபோல ஒருநிலை ஏற்பட்டு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க மறுத்தது. இம்முறையும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஐசிசி தரப்பு வரிவிலக்கினை கட்டாயமாக கோரியுள்ளது. இதனால் இந்தியாவில் டி20 உலகக்கோப்பையை நடத்துவதில் சிக்கல் உண்டாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் இதுகுறித்து அளித்த விளக்கத்தில், “இதில் அச்சப்பட ஏதும் இல்லை. நான் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஐசிசி மற்றும் மத்திய அரசிடம் எங்களது குழு தொடர் இணைப்பில் இருப்பதால், திட்டமிட்டபடி நடக்கும்.” என்றார்.