இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவரில் 252 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி 92 ரன் எடுத்தார்.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 43.1 ஓவரில் 202 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டோனிஸ் 62 ரன் எடுத்தார்.
இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட்டும், சாஹல், பாண்யா தால 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்தியா 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
நாங்கள் முழுமையாக ஆட்டத்தை வெளிபடுத்தினோம் என்று நினைக்கவில்லை. ஆட்டம் முழுவதும் திருப்புமுனைகள் தேவைப்பட்டது. பேட்டிங் செய்ய ஆடுகளம் எளிதாக இல்லை. இதை அனைத்து பேட்ஸ் மேன்களும் உணர்ந்து இருந்தனர்.
புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சு முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால் அவர்களுக்கு முதல் 10 ஓவரில் ரன்கள் தேவைப்பட்டது. அவரும், பும்ராவும் சிறப்பாக பந்து வீசினர். அவர்கள் 2019-ம் உலக கோப்பைக்கான போட்டியில் இருக்கிறார்கள்.
எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் (வீரர்கள்) இருக்கின்றனர். அதை அனைத்தையும் சோதித்து பார்த்து வருகிறோம். எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பேன். அதை எந்த சூழ்நிலையிலும் மாற்றி கொள்ள மாட்டேன். நான் நீண்ட நேரம் களத்தில் இருக்க வேண்டும் என்பதை அறிவேன். ஏனென்றால் ஆடுகளம் கடினமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறியதாவது:-
இந்தியாவை 250 ரன்னுக்குள் கட்டுபடுத்தியது மகிழ்ச்சி அளித்தது. ஆனால் நெருக்கடி நேரத்தில் பேட்ஸ் மேன்கள் தவறான முடிவுகளை எடுத்து விட்டனர்.
அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அடிக்கடி இதுபோன்று சரிவை சந்திக்கிறோம் என்பதை நேர்மையாக ஏற்றுக்கொள்கிறேன். அதிக அளவிலான சரிவை கண்டுள்ளோம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அழுத்தமான சூழ்நிலைகளில் இருக்கும்போது சிறந்த முடிவை எடுக்க வேண்டும். இது மாற்றப்பட வேண்டும். ஒழுங்காக விளையாடத் தொடங்க வேண்டும். தற்போதைய செயல் திறன் போதுமானதாக இல்லை.
வீரர்கள் சிறப்பாக பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அழுத்தமான சூழ்நிலையில் களத்தில் எப்படி திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். இந்த ஆட்டத்தில் சிறந்த பார்ட்னர்ஷிப்பை நாங்கள் பெறவில்லை. வேடிக்கையான பிழைகளை செய்கிறோம்.
இந்தியா போன்ற தரம் வாய்ந்த அணிக்கு எதிராக இதுபோன்ற தவறுகளை செய்ய வீரர்களுக்கு அனுமதியில்லை.
மைதானத்துக்கு வெளியே அமர்ந்து கொண்டு, இது நிறுத்தப்பட வேண்டும் என்று எளிதில் கூறிவிடலாம். ஆனால் களத்தில் நாம் என்ன செய்துவருகிறோமோ அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பந்துகளை நெருக்கமாகப் பார்த்து ஆட வேண்டும் என்கிறார்கள், ஒருவேளை ரொம்பவும் நெருக்கமாகப் பார்த்து ஆட்டத்தை ஆட மறந்து விடுகின்றனர் போலும். அதிகமாக சரிவுகள் காண்பது நிச்சயம் நல்லதுக்கல்ல.
அனேகமாக எனது மற்றும் ஹெட்சின் தவறாக இருக்கும். கடைசி கட்டத்தில் ஸ்டோனிஸ் சிறப்பாக விளையாடியனார். நாங்கள் சரியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி வருகிற 24-ந்தேதி இந்தூரில் நடக்கிறது.