இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க மும்பையை சேர்ந்த பிரதீப் சகு என்ற ஒரு லெக் ஸ்பின்னரை ஆஸ்திரேலிய அணி ஒப்பந்தம் செய்துள்ளது . மேலும் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய சுற்றுப் பயணத்தில் ஆலோசகராக செயல்படுவார் என்று அறிவித்துள்ளது.
வரும் ஒருநாள், டி20 தொடர்களில் விராட் கோலி அணியை சமாளிக்க தெளிவான செயல்திட்டம் உள்ளதாக ஆஸி. அணி கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸி.யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக் பேஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் ரினேகேட்ஸ் அணியை பட்டம் வெல்லச் செய்த பின்ச் கூறியதாவது-
இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள், டி20 தொடர்களில் கோலி அணியை வெல்ல தெளிவான செயல்திட்டத்துடன் உள்ளோம். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் போது சற்று கவனத்துடன் ஆட வேண்டும். சிறிதளவு தவறினாலும், எங்கள் அணி தான் பாதிக்கப்படும்.
உள்ளூர் சூழலில் இந்திய அணி ஒருநாள் ஆட்டங்களில் சிறந்த அணியாக விளங்கும். அதனால் முழு நம்பிக்கையுடனும் தெளிவான ஆட்ட உத்தியை வகுத்துள்ளோம் என்றார் பின்ச்.
வரும் 24-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் முதல் டி20 ஆட்டம் தொடங்குகிறது. இரண்டாம் டி20 ஆட்டம் பெங்களூருவில் 27-ஆம் தேதி நடக்கிறது.
5 ஒரு நாள் ஆட்டங்கள் வரும் மார்ச் 2-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி, பின்னர் நாக்பூர், ராஞ்சி, மொஹாலி, தில்லியில் நடக்கிறது.
வலுகுறைந்த ஆஸி. அணி:
அதிரடி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மீதான தடை மார்ச் மாதம் நிறைவடைகிறது. அவர்கள் இல்லாமல் ஏற்கெனவே பேட்டிங்கில் வலுகுறைந்த நிலையில், பிரதான பந்துவீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் காயமடைந்து, இந்திய தொடரில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸி. அணிக்கு இரட்டை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நியூஸிலாந்தில் 2 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி தற்போது மீண்டும் அணியில் இணைவதால், இந்திய அணி பலம் கூடுதலாகி உள்ளது.