பதினைந்து வருட கிரிக்கெட் வாழ்க்கையில், உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் இன்றுதான் ஆடுகிறார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இதற்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றார். ஆனால், ஒரு போட்டியில் கூட அவர் களமிறக்கப்படவில்லை. அதற்கடுத்து 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு அவர் தேர்வாகவில்லை.
இதற்கிடையே, இப்போது நடக்கும் தொடரில் பங்கேற்றார். ஆனால், இதுவரை நடந்த போட்டிகளில் ஒன்றில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப் படவில்லை. இந்நிலையில் இன்று நடக்கும் 40 வது லீக் போட்டியில், இந்தியா- பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் கேதர் ஜாதவுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். கிரிக்கெட்டில் அறிமுகமாகி 15 வருடம் ஆன நிலையில், இன்றுதான் அவர் உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தை ஆடுகிறார்.
2004-ல் தோனி, சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய அணி வீரராக அறிமுகமானார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இந்நிலையில் 15 வருடங்கள் கழித்து ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் இடம்பெற்றுள்ளார்.
2019 உலகக் கோப்பைப் போட்டியில் தேர்வான 34 வயது தினேஷ் கார்த்திக், வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார். இதன்மூலம் அவர் உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறார்.
அதே நேரம், இன்றைய போட்டியில் தோனி, ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் என மூன்று விக்கெட் கீப்பர்கள் விளையாடி வருகின்றனர். ஒரு போட்டியில் மூன்று விக்கெட் கீப்பர்கள் பங்கேற்று விளையாடுவது இதுவே முதல் முறை.