ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு அம்மாநில கிரிக்கெட் சங்கம் ரூ.5 கோடி பரிசு தொகையை அறிவித்து உள்ளது.
டெல்லி முதல் இன்னிங்சில் 295 ரன் எடுத்தது. விதர்பா முதல் இன்னிங்சில் 547 ரன் குவித்தது. 252 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடிய டெல்லி 2-வது இன்னிங்சில் 280 ரன் எடுத்தது.
இதனால் விதர்பாவுக்கு 29 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி இந்த ரன்னை 1 விக்கெட்டை இழந்து எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.
ரஞ்சி கோப்பையை விதர்பா அணி முதல் முறையாக கைப்பற்றி முத்திரை பதித்தது. முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்ற 18-வது அணி என்ற பெருமையையும் பெற்றது.
ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு அம்மாநில கிரிக்கெட் சங்கம் ரூ.5 கோடி பரிசு தொகையை அறிவித்து உள்ளது.
இது குறித்து விதர்பா கிரிக்கெட் சங்க தலைவர் ஆனந்த் ஜெய்ஷ்வால் கூறும் போது, “ரஞ்சி கோப்பையை முதல் முறையாக வென்ற விதர்பா அணிக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும்.
வீரர்கள் மற்றும் அணியில் உள்ளவர்களுக்கு இந்த தொகை பகிர்ந்து அளிக்கப்படும். மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு நடத்தப்படும்” என்றார்.
இந்த ரஞ்சி தொடரில் கர்நாடக வீரர் அகர்வால் அதிக ரன்களை எடுத்தார். அவர் 8 ஆட்டத்தில் 1166 ரன் எடுத்துள்ளார். இதில் 5 சதம் அடங்கும். சராசரி 105.45 ஆகும்.
அவருக்கு அடுத்தபடியாக விதர்பா அணி கேப்டன் பாய்ஸ் பைசல் 912 ரன் எடுத்து 2-வது இடத்தை பிடித்தார். அவர் 9 போட்டியில் 912 ரன் எடுத்தார். இதில் 5 சதம் அடங்கும். மற்றொரு விதர்பா வீரர் சஞ்சய் 3 சதத்துடன் 775 ரன் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.
கேரள வீரர் ஜலக் சச்சேனா 44 விக்கெட் (7 போட்டி) கைப்பற்றி முதல் இடத்தை பிடித்துள்ளார். சராசரி 17.11 ஆகும். 5 விக்கெட்டை 3 முறைக்கு மேல் எடுத்துள்ளார். குர்பானி (விதர்பா) 39 விக்கெட்டும், அசோக் திண்டா (மேற்கு வங்காளம்) 35 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.