இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் ந்டைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது.
இதையடுத்து 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா” மைதானத்தில் நடக்கவுள்ளது. நாளை நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடக்கிறது. இதையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த 4 டெஸ்ட் தொடரும் முடிவடைந்த பிறகு இங்கிலாந்து மற்றும் இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழக வீரர்களான வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா தொடரை கலக்கிய வாசிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகிய மற்றொரு தமிழக வீரர் வரும் சக்கரவர்த்தி மீண்டும் இடம் பெற்றிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவாதியா ஆகியோர் முதன் முறையாக சர்வதேச அணியில் இடம் பெற்றிருக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கின்றனர். இவர்களது இந்த முன்னேற்றத்தை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இவர்களது வருகையால் இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மனிஷ் பாண்டே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும்தான் வெளியேற்றப்பட்டவர்கள். சஞ்சு சாம்சன் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறியதால் வெளியேற்றப்பட்டார். இவர் 7 போட்டிகளில் விளையாடி வெறும் 83 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து மனிஷ் பாண்டேவும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.