இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது.
இதன் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 30 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே குவித்தது.இதனால் இந்திய அணிக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகச்சிறிய இலக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது.
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளதாலும் பேட்ஸ்மன்கள் பேட்டிங்கில் திணறியதாலும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர். இந்தப் போட்டி நடைபெற்ற பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று போட்டி தொடங்குவதற்கு முன்பு பேசப்பட்டது.
ஆனால் இந்த போட்டி ஸ்பின் பவுலர்களுக்கு ஏற்றவாறு அமைந்தது. இதனால் ஸ்பின் பவுலர்களான அக்சர் பட்டேல் 11 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்களையும் பார்ட் டைம் பவுலரான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேசுகையில் “ பார்ட் டைம் பவுலரான நானே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினேன் என்றால் பிட்ச்சின் தன்மை எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள்.
இந்த பிட்ச்சின் தன்மையை முடிவு செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்களது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வீரராக என்னால் என்ன செய்ய முடியும். பிட்ச் கொடுக்கப்பட்டால் அதில் விளையாட தான் முடியும். எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் இதில் மிகவும் சிரமப்பட்டார்கள்” என்று ரூட் கூறியுள்ளார்.