வாங்கிய அடியை வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்த இங்கிலாந்து; கடுப்பில் ரசிகர்கள்
இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியானது இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸ் முடிவில் 326 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 219 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்பிறகு 107 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் வீரர்கள், முதல் இன்னிங்ஸில் விளையாட்டிற்கு நேர் மாறாக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஷான் மசூத் டக்-அவுட்டிலும், அரைசதம் அடித்த பாபர் அசாம் 5 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர். இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 137 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழந்து சொதப்பினர். யாசிர் ஷா மட்டும் 33 ரன்கள் எடுத்து கொடுத்து மானம் காத்ததன் மூலம் 169 ரன்களை எட்டிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்.