ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடருக்கு இந்திய ரகானே புறக்கணிக்கப்பட்டது சரியல்ல என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி நாளை முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து 4 போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய இந்திய துவக்க வீரர் ரகானே புறக்கணிக்கப்பட்டார். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில்,’ ரகானேவை டி-20 தொடரில் புறக்கணித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் கூட ராகுல் விளையாட வில்லை. அவருக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என நான் சொல்லவில்லை. நல்ல பார்மில் உள்ள ரகானேவை புறக்கணித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ‘ என்றார்.
இந்திய அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, எம்.ஸ். தோனி, கேதார் ஜாதவ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்த்ர சஹால், ஆஷிஷ் நெஹ்ரா, புவனேஸ்வர் குமார், ஜேஸ்ப்ரிட் பும்ரா.