மிகவும் எளிமையான பின்புலத்திலிருந்து வந்த தங்கராசு நடராஜனை போன்ற வீரர்கள்தான் இந்திய அணிக்கு தேவை என்று தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக நேற்று நடைபெற்ற 3 வது ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. 4 புதிய வீரர்கள் களமிறக்கப் பட்டனர். அதில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனும் ஒருவர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இந்த வருடம் மிகச் சிறப்பாக பந்து வீசிய தங்கராசு நடராஜன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது விராட் கோலியின் கண்களை பறித்தது. உடனடியாக நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 302 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடராஜன் குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “நான் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களது அணியின் வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் மிக மிக எளிமையான பின்புறத்திலிருந்து கடினமாக உழைத்து மேலே வந்து இருக்கிறார். அவரது கதை அனைவருக்கும் ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கிறது. இவரைப் போன்ற வீரர்கள்தான் இந்திய அணிக்கு தேவை” என்று தெரிவித்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா. இந்த போட்டியில் 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.