ஐ.பி.எல் தொடரில் எனது டார்கெட் இந்த இரண்டு இந்திய வீரர்கள் தான்; இளம் வீரர் கெத்து பேச்சு
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விக்கெட்டுதான் குறி என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் டாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.
இவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். 2-வது போட்டியில் இங்கிலாந்து இரண்டு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். கடைசி ஓவரை வீசி சிறப்பாக கட்டுப்படுத்தினார்.
இவர் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் போட்டியின்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்துவதே குறி என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாம் கர்ரன் கூறுகையில் ‘‘ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் உலகின் தலைசிறந்த வீரர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பந்து வீச்சாளர்கள் அவர்களின் திட்டத்தை சரியான வகையில் செயல்படுத்துவதைத்தான் எதிர்நோக்குவார்கள்.
அதனால் நான் அவர்களை விட என்னுடைய திறமையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.