இலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த அணியின் ஜேசன் ராய் உடற்தகுதி பெற்று விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஜூன் 14ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய்க்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்நிலையில் திங்களன்று எடுக்கப்பட்ட 2வது ஸ்கேனில் காயம் நன்றாக குணமடைந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ஜூன் 30ம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் ஆடும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
ஆனால் நாளை (செவ்வாய்) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் ஆட மாட்டார். ஆனால் இன்று காலை வலைப்பயிற்சியில் அவர் பேட் செய்தார். அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார், கடைசி 2 குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் அவர் ஆடுவார் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி தன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள தங்களது கடைசி 3 ஆட்டங்களில் குறைந்தது 1 ஆட்டத்திலாவது வெல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஜேசன் ராய் தன் கடைசி 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5 முறை அரைசதம் கடந்துள்ளார். சமீபத்திய 8 போட்டிகளில் 3 முறை சதமும் எடுத்துள்ளார் ராய்.
மேலும் நடப்பு உலகக்கோப்பையில் டேவிட் வார்னருக்கு அடுத்த படியாக தனிநபர் அதிக ஸ்கோரை எடுத்தவர் ஜேசன் ராய். வங்கதேசத்துக்கு எதிராக 153 ரன்களை இவர் விளாசினார்.
இவருக்குப் பதிலாக தொடக்க வீரராகக் களமிறங்கும் ஜேம்ஸ் வின்ஸ் கடுமையாக சொதப்பி வருவதால் இங்கிலாந்து அணி அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராயை வெகுவாக எதிர்நோக்கியுள்ளது.