தென்னாப்பிரிக்க வீரர் லான்ஸ் குளுஸ்னரைப் போல் அதிரடியாக ஆடுகிறார் ஹார்திக் பாண்டியா என ஜாம்பவான் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 27 பந்துகளில் 48 ரன்களை விளாசி, வெற்றிக்கு வித்திட்டார் ஆல்ரவுண்டர் பாண்டியா. இந்நிலையில் அவரது ஆட்டத்தை, கடந்த 1999 உலகக் கோப்பையில் குளுஸ்னர் ஆட்டத்துடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார் வாக்.
அவர் ஐசிசி அதிகாரபூர்வ இணையத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பாண்டியாவின் அதிரடி ஆட்டம், எதிரணிகளுக்கு முதுகெலும்பில் அச்சத்தை ஏற்படுத்தும். ஒரு இன்னிங்ஸை தொடங்கி, அதிரடியாக முடிப்பதை பாண்டியா அறிவார். அவரது ஷாட்களை தடுக்க எந்த வீரராலும் முடியாது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 1999-இல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில், குளுஸ்னர் ஸ்ட்ரைக் ரேட் 122.17 உடன் மொத்தம் 281 ரன்களை விளாசினார். அரையிறுதில் எதிர்பாராத வகையில் ஆஸி.யிடம் தோல்வியுற்றது தென்னாப்பிரிக்கா.
தோனிக்கும் பாராட்டு: 14பந்துகளில் 27 ரன்களை விளாசி அணியின் ஸ்கோர் 350-ஐ எட்ட உதவினார் தோனி. தேவையான நேரத்தில் அவர் அபாரமாக ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்தியாவுடன் தோல்வி கண்டாலும், ஆஸி. அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும். பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசைகளில் தேவையான மாற்றங்களை செய்து ஆஸி. தனது இருப்பை வெளிப்படுத்தும் என்றார் வாக்.
இந்நிலையில், இந்தியாவின் மூத்த தொடக்க வீரர் ஷிகர் தவன் கை பெருவிரல் காயத்தால் அடுத்த 3 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்லது. இது இந்திய அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.
ஒருநாள் ஆட்டங்களில் ரோஹித் சர்மா-தவன் இணை இந்தியாவின் பல வெற்றிகளுக்கு வித்திட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவன் அபாரமாக ஆடி 16 பவுண்டரியுடன் 117 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.
சிறந்த பார்மில் உள்ள தவனுக்கு ஆஸி. பவுலர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தால் இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. எனினும் அதைப் பொறுத்துக் கொண்டு தவன் ஆட முயன்றார். இதையடுத்து அவருககு லீட்ஸில் உள்ள மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. ஆஸி.க்கு எதிராக பீல்டிங் செய்ய தவன் வரவில்லை. இதனால் அவரால் அடுத்த 2 ஆட்டங்களுக்கு ஆட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஷிகர் தவன் ஆட முடியாதது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகும். அவருக்கு மாற்று ஆட்டக்காரரை அணி நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை. முழுமையான சோதனை முடிவுகள் வெளிவந்தால் தான் இதுகுறித்து அணியுடன் சென்றுள்ள தேர்வாளர்கள் எம்எஸ்கே. பிரசாத், தேவங்க்காந்தி, சரண்தீப் சிங் முடிவெடுப்பர் எனத் தெரிகிறது.