உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என ஒரு மாதத்திற்கு முன்பு சச்சின் தெரிவித்த கருத்து அப்படியே நடந்துள்ளது.
உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைய உள்ளன. இன்று நடைபெறும் போட்டியில் ஆப்கான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் போட்டியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது. நாளை மறுநாள் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இலங்கையும் இந்தியாவும், தென்னாப்ரிக்காவை ஆஸ்திரேலிய அணியும் சந்திக்கின்றன.
அரையிறுதியைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா முதல் அணியாக தகுதிப் பெற்றது. தற்போது இந்தியாவும், இங்கிலாந்து அணியும் தகுதி பெற்றுள்ளன. மூன்று அணிகள் அரையிறுதிக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நான்காவது அணி யார் என்பது நாளை நடைபெறும் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியை பொறுத்து முடிவாகும். நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் ஏதேனும் ஒன்று அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் குறித்து மே மாதம் சச்சின் கூறிய கணிப்பு அப்படியே நடந்துள்ளதை பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். அரையிறுதிக்கு தகுதிபெறும் 4 அணிகள் குறித்து அப்போது சச்சினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதியில் இடம்பெறும். நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் இரண்டில் இரு அணி வரும்” என்று கூறியிருந்தார்.
சச்சினின் கணிப்பு தற்போது ஒன்று கூட மாறாமல் அப்படியே நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒரு அணி தகுதிபெறும் நிலையில் உள்ளது. இதில், நியூசிலாந்து அணி தகுதி பெறவே 99 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தானுக்கு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இதனிடையே, அரையிறுதி போட்டியில் இடம்பெறும் அணிகள் குறித்து சச்சின் சரியாக கணித்துள்ளதை காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எம்.பியுமான சசிதரூர் ஆச்சர்யமாக பாராட்டியுள்ளார். சச்சின் அளித்த பேட்டியின் விவரத்தையும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.