இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று நான் செய்தது இது மட்டும் தான் என போட்டி முடிந்த பிறகு சூட்சமத்தை பேட்டியில் கூறியுள்ளார் ஹர்திக் பாண்டியா.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பேட்டிங் செய்வதற்கு முடிவு செய்தார்.
ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இரண்டு பேரும் இந்திய அணிக்கு ஓப்பனிங் பேட்டிங் செய்தனர். இஷான் கிஷன் (1) துவக்கத்திலேயே ஆட்டமிழந்தார். ராகுல் திரிப்பாதி, வந்த வேகத்திலேயே அதிரடியை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 44 ரன்கள் அடித்து இந்திய அணியின் கியரை மாற்றிவிட்டு அவுட் ஆனார்.

ஷுப்மன் கில், 35 பந்துகளில் அரைசதம் கடந்தபின், அசுர வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார். சூரியகுமார் யாதவ் 24(13) ரன்கள், ஹர்திக் பாண்டியா 30(17) ரன்கள் என இருவரும் தங்களது பங்களிப்பை கொடுத்துவிட்டு அவுட்டாகினர்.
மறுனையில் அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில், டி20 போட்டிகளில் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இறுதிவரை அவுட்டாகாமல் 123(63) விளாசினார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்தது.

இந்த கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பவர்பிளே ஓவர்களிக் வெறும் 30 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அடுத்த விக்கெட் 53 ரன்களுக்கு விழுந்தது. பின்னர் வரிசையாக நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வெளியேற, 12.1 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது.
168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, 2-1 என டி20 தொடரை கைப்பற்றியது. தொடர் நாயகனாக கேப்டன் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்தபின் பேசிய அவர் கூறுகையில்,

“மைதானத்தை பற்றி முன்கூட்டியே இருக்கும் ஐடியாக்களை எடுத்துக்கொள்ளாமல், அன்றைய நாள் ஆட்டத்திற்கு என்ன தேவை என்பதை திட்டமிடுவேன். என்னுடைய கேப்டன்ஷியில், பெரிதாக யோசித்து குழப்பிக்கொள்ளாமல் எளிமையான ஐடியாக்களை செயல்படுத்த நினைப்பேன். அதிகமாக என்னுடைய உள்ளுணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பேன். இது தோல்வியடைந்தால், முழுக்க முழுக்க என்னுடைய தோல்வியாக இருக்கும்.
ஐபிஎல் இறுதிபோட்டியில் இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் உள்ளது. ஐபிஎல் முற்றிலும் மாறுபட்டது. அப்போது வேறு விதமாக யோசிக்கவேண்டும். ஆனால், சர்வதேச போட்டிகள் வித்தியாசமானவை. இதற்கு வேறு மாதிரியாக சிந்திக்க வேண்டும். முதலில் பேட்டிங் செய்தால் இந்திய அணியால் வெற்றிபெற முடியும் என யோசித்து வந்தேன். அது சரியாக நடந்துவிட்டது.” என பேசினார்.