பகலிரவு போட்டியாக நடக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தி வருவதால் காயத்திலிருந்து குணமடைந்த உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் இருக்கின்றனர்.

இதையடுத்து நடைபெற இருக்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா” மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கும் என்று கூறியுள்ளனர். 3ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி(நாளை) தொடங்க இருக்கிறது.
இந்த போட்டி பிங்க் நிற பந்தில் நடைபெற இருப்பதால் வீரர்கள் பந்தை எதிர்கொள்வதற்கு சிரமமாக இருக்கும். இருப்பினும் இதில் வென்று தொடரில் முன்னிலை வகிப்பதற்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய உமேஷ் யாதவ் தற்போது மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக நாளை (பிப்.24) நடைபெறவிருக்கும் பகலிரவு போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடைந்து தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்று இருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் மீண்டும் இணைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கூறப்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
