இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி கட்டாக்கில் நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோகித் 17 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தோனி, 13 வது ஓவரில் களமிறங்கும்போது இந்திய அணி, 101 ரன்களில் இருந்தது. கே.எல். ராகுல் 48 பந்துகளில் 61 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, மனீஷ் பாண்டே வந்தார். இவரும் தோனியும் இணைந்து அடித்து ஆட முயன்றனர். ஆனால், மைதானம் ஒத்துழைக்கவில்லை.
இலங்கை அணி, சிறப்பாக பந்துவீசியதால் அடித்து ஆட முடியவில்லை. 11 முதல் 16 ஓவர்கள் இடைவெளியில் இந்திய அணி, வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து அதிரடியை காட்டத் தொடங்கினார்கள் தோனியும் பாண்டேயும்.
தோனியின் டிரேட்மார்க் ஷாட்களை நேற்றுப் பார்க்க முடிந்தது. அவர், பந்துவீசிய திசையை நோக்கி, நேராக அடித்த ஒரு பந்து புல்லட் வேகத்தில் சென்றதைக் கண்டு மெய்மறந்தனர் ரசிகர்கள். அதே போல கடைசி பந்தில் தோனி அடித்த சிக்சர் அபாரம். பந்துவீசிய பெரேரா, ‘இதெப்படி?’ என்று பந்து போகும் திசையை பார்த்தே நொந்து போய்விட்டார்.
தோனியும் மனீஷ் பாண்டேவும் இணைந்து நேற்று ஆடிய விதம், ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங்கும் தோனியும் இணைந்து 256 ரன்கள் குவித்ததை ஞாபகப்படுத்தியது என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். கடைசி 4 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 61 ரன்களை திரட்டியது. தோனி 22 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 61, தோனி 39, மணிஷ் பாண்டே 32, ஸ்ரேயாஸ் ஐயர் 24, ரோகித் சர்மா 17, ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இறுதியில் 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் சஹால் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் 4ஆவது விக்கெட்டிற்கு இறங்கிய தோனி அதிரடியாக 22 பந்துகளுக்கு 39 ரன் குவித்தார். தோனி மற்றும் மணீஷ் பாண்டே ஜோடி மட்டும் இக்கட்டான சூழ்நிலையில் 68 ரன் சேர்த்து இந்திய அணிக்கு இரு நல்ல ஸ்கோர் எடுத்து தந்தது. இந்த ஆட்டத்தின் போது மணீஷ் பாண்டே பேட்டிங் செய்த போது, அவருக்கு நேர் எதிரே நின்று கொண்டிருந்த கேமரா மேனால் அவரது கவனம் சிதறியது.
மறு முனை யில் நின்று கொண்டிருந்த தோனி அந்த கேமரா மேனை பார்த்து அந்த பக்கம் நகர சொன்னார். ஆனால், அவர் மெதுவாக நகரவே, டென்ஷன் ஆன தோனி கேமரா மேனை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்து முறைத்து நடந்தார், இதனை பார்த்த கேமராமேன் வேகமாக தெறித்து ஓடி ஒளிந்து கொண்டார். இந்த காட்சி டீவியில் காட்டப்படவில்லை. மைதானத்தில் இருந்த ஒருவரது தகவலின் படி இது எழுதப்பட்டது.