இந்த சம்பவத்துக்கு முன்னாடி சுப்மன் கில் அடித்த டபுள் செஞ்சுரி ஒன்னுமே இல்ல; பாராட்டி பேசிய ஆகாஷ் சோப்ரா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்த சுப்மன் கில்லை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதின.
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 80 ரன்களும், தவ்ஹித் ஹிர்தாய் 54 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரரான சுப்மன் கில் நீண்ட நேரம் போராடி 133 பந்துகளில் 121 ரன்களும், கடைசி நேரத்தில் போராடிய அக்ஷர் பட்டேல் 34 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறியதால் 49.5 ஓவரில் 259 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், இந்தியா வங்கதேசம் இடையேயான போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்லை வெகுவாக பாராட்டியும் பேசியுள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில்லின் பேட்டிங் அனுபவமிக்கதாக இருந்தது. என்னை பொறுத்தவரையில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்ததை விட வங்கதேச அணிக்கு எதிரான இந்த சதம் சிறந்தது. ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்த போதிலும் சுப்மன் கில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்ததை பாராட்டியே ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.