இந்தியா-விண்டீஸ் 3வது டி20 போட்டியில் இன்று பலபரிச்சை மேற்கொள்கின்றன. இதில் யார் வெல்வார் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆடி வருகிறது. முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது.
அடுத்ததாக, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியை துவம்சம் செய்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்று தொடரை சமன் செய்தது.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இரு அணிகளும் களம் இறங்குவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
வானிலை மற்றும் பிட்ச் அறிக்கை:
மும்பையில் இன்று வானிலை சீராக இருக்கிறது. காற்றின் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மழையின் குறியீடு இருக்காது என்பது உறுதி.
பிட்ச் அறிக்கையை பார்க்கையில், மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. திருவனந்தபுரம் மைதானத்தை விட சற்று வேகமான அளவில் பந்து பேட்ஸ்மேனுக்கு வரும் என்பதால் எளிதாக ரன்கள் குவிக்க முடியும். முதலில் பேட்டிங் செய்யும் அணி எளிதாக 180 ரன்களுக்கு மேல் அடிக்க இயலும் என கணிக்கப்படுகிறது.
நேருக்கு நேர்:
இரு அணிகளும் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இந்தியா – 9 வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணி – 6 வெற்றி
ஒரு போட்டி முடிவின்றி ரத்தானது குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெறும் அணி (கணிப்பு):
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய மண்ணில் தொடரை இழந்தது இல்லை. அதேபோல், வான்கடே மைதானத்தில் இந்திய அணி டி20 போட்டியில் தோல்வியை தழுவியதில்லை.
வான்கடே மைதானம் ரன் குவிப்பிற்கு சாதகமாக இருந்தாலும், வேகப்பந்துவீச்சுக்கு ஏதுவாக இருப்பதால், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் விண்டீஸ் வீரர்களின் வேகப்பந்துவீச்சை விட சிறப்பாக செயல்படுகின்றனர்.
இவை அனைத்தையும் பார்க்கையில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்லும் என கணிக்கப்படுகிறது.