விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. விண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கெய்ல் மெயர்ஸ் 73 ரன்களும், ரோவ்மன் பவல் 23 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் 76 ரன்களும், ரிஷப் பண்ட் 33* ரன்களும் ஸ்ரேயஸ் ஐயர் 24 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
விண்டீஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.