தோல்விக்கு இவர்கள் தான் காரணம்; தென் ஆப்ரிக்கா கேப்டன் வேதனை
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.
பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் புதிய கேப்டனான டி.காக் அரைசதமும், தெம்பா பாவுமா 49 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்கா அணி வெறும் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியில் இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், ஷிகர் தவானுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதனாமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தவான் 40 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி தொடர்ந்து அசத்தினார். ஆனால், ரிஷப் பண்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 எடுத்தது. விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டி காக் பேசியதாவது;
மைதானத்தின் தன்மை உணர்ந்து ஆடுகளத்தை எங்களை விட இந்திய வீரர்கள் சிறப்பாக கையாண்டு தங்களுக்கு சாதகமாக மாற்றி கொண்டனர், போட்டியை நன்றாக தான் துவங்கினோம், அதே போல் கடைசி கட்டத்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாகவே பந்துவீசினர் இருந்த போதிலும் இந்திய வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியை வென்றுள்ளனர். தவறுகளை சரி செய்து கொண்டு எஞ்சியுள்ள போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம்” என்றார்.