போட்றா வெடிய… நியூசிலாந்து அணியை அசால்டாக வீழ்த்தியதற்கு கிடைத்த தரமான பரிசு; தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்திய அணி
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் மொத்தமாக கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 112 ரன்களும், ரோஹித் சர்மா 101 ரன்களும், ஹர்திக் பாண்டியா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 385 ரன்கள் குவித்தது.
இதன்பின் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான பின் ஆலன் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.
ஹென்ரி நிக்கோலஸ் (42), டேரியல் மிட்செல் (24), பிரேஸ்வெல் (26) போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டை இழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நீண்டநேரம் தாக்குபிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டீவன் கான்வே 100 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் எடுத்து கொடுத்தார். டீவன் கான்வேவை தவிர மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்ய தவறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 41.2 ஓவரில் 295 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதே போல் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியதன் மூலம், இந்திய அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கும், ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திற்கும் பின்தள்ளப்பட்டுள்ளது.