வெற்றிக்காக வெறித்தனமாக போராடிய நியூசிலாந்து வீரர்கள்… கடைசி நேரத்தில் வெற்றியை ருசித்த இந்திய அணி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி வெறும் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சிவம் மாவியை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பின் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியும் பேட்டிங்கில் மிக கடுமையாக திணறியது.
சூர்யகுமார் யாதவ் உள்பட இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் கூட பெரிதாக ரன் குவிக்க முடியாமல் திணறியதால் கடைசி ஒரு ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை இந்திய அணி சந்தித்தது.
கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் சூர்யகுமார் யாதவ் திணறினாலும், கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தததால் 19.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை சமன் செய்துள்ளது.