முடிஞ்சா அடிச்சுக்கங்க… ரோஹித் சர்மா, சுப்மன் கில் அபாரம்; நியூசிலாந்திற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். ரோஹித் சர்மா 85 பந்துகளில் 101 ரன்களிலும், சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இஷான் கிஷன் (17) மற்றும் சூர்யகுமார் யாதவ் (14) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இதன்பின் களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா 38 பந்துகளில் 54 ரன்களும், ஷர்துல் தாகூர் 25 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 385 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக திக்னர் மற்றும் ஜேகப் டஃப்ஃபி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.