சாட்னரை அவசரப்பட்டு இழக்க நாங்கள் தயாராக இல்லை; பிளமிங்
காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ள மிட்செல் சாட்னருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் அவசியம் தற்போது இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி,20 தொடரான ஐ.பி.எல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் வரும் 7ம் தேதி துவங்க உள்ளது.
இதில் முதல் தொடரில் இருந்தே பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டு வருட தடை காலம் முடிந்து மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது, குறிப்பாக தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தற்பொழுதே உருவாகிவிட்டது, சென்னை அணியின் பயிற்சியை பார்க்கவே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.
அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களிலும் தமிழிலேயே ட்வீட் போட்டு மாஸ் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் சாட்னருக்கு பதிலாக மாற்று வீரரை உடனடியாக தேர்ந்தெடுக்கும் அவசியம் எதுவும் தற்போது இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “இந்த தொடரில் காயமடைந்து விட்டதான் காரணமாக மிட்செல் சாட்னரை முழுமையாக இழக்க நாங்கள் விரும்பவில்லை. அவரை இந்த தொடருக்காக மட்டும் நாங்கள் எடுக்கவில்லை. அடுத்த சில தொடர்களுக்கும் அவரது அனுபவம் நிச்சயம் தேவைப்படும். மேலும் உடனடியாக அவரது இடத்தை நிரப்புவதற்கு எந்த அவசரமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.