ஹர்பஜன் சிங்கை சென்னையில் எடுத்ததற்கு இவர் தான் காரணம்… உண்மையை உடைத்த உரிமையாளர்
தோனி அறிவுறுத்தியதன் காரணமாகவே ஹர்பஜன் சிங்கை சென்னை அணியில் எடுத்ததாக சென்னை அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்ட நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அஸ்வினை கழட்டிவிட்டு ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இது குறித்து பேசிய சென்னை அணியின் உரிமையாளர், தோனி அறிவுறுத்தியதன் காரணமாகவே ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுத்தோம் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “ஹர்பஜன் சிங்கை சென்னை அணியில் எடுக்க தோனி தான் அறிவுறுத்தினார். அதன் காரணமாகவே அவரை ஏலத்தில் எடுத்தோம். அஸ்வினின் இடத்தை ஹர்பஜன் சிங் நிச்சயம் பூர்த்தி செய்வார், அதே போல் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங்கின் அனுபவமும், ஆலோசனைகளும் நிச்சயம் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் கேதர் ஜாதவிற்காக 7 கோடி ரூபாய் கொடுத்தது சரியானது தான், அவர் அதற்கு தகுதியான வீரர் தான் என்று சென்னை அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.