சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதி வருகின்றன.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான விராட் கோலி மற்றும் படிக்கல், தங்களது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
விராட் கோலி 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். விராட் கோலி விக்கெட்டை இழந்த பிறகு டிவில்லியர்ஸுடன் இணைந்து படிக்கல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
டிவில்லியர்ஸும், படிக்கல்லும் விக்கெட்டை இழக்காமல் இருந்தால் பெங்களூர் அணி ஈசியாக 180 ரன்களை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷர்துல் தாகூர் போட்டியின் 17வது ஓவரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்தில் படிக்கல் மற்றும் டிவில்லியர்ஸ் இருவரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெரிதாக ரன் குவிக்காததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 156 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக டூவைன் பிராவோ 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.