இந்திய அணியை வழிநடத்துவதற்கான அனைத்து தகுதியும் ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
அணியும் புதிது கேப்டனும் புதிது என்றாலும் கிரிக்கெட்டில் திறமைக்கு தான் பரிசு என்பதை உறுதி செய்யும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது ரசிகர்கள் உட்பட பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்றுள்ளது.
இந்த நிலையில் வெற்றிபெற்ற குஜராத் அணியையும் அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களையும் மேலும் அந்த அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவையும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.மேலும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிபெற செய்த ஹர்திக் பாண்டியா நிச்சயம் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியை வழி நடத்தக்கூடிய அனைத்து திறமையும் ஹர்திக் பாண்டியாவிடம் உள்ளது என்று பாராட்டிப் பேசியுள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், 2022 ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாதான், ஹார்திக் பாண்டியா தன்னால் அணியை வழிநடத்த முடியும் என்பதை இதன் மூலம் நிரூபித்து விட்டார் அவரை சுற்றியிருந்த ஒரே ஒரு குழப்பம் அவருடைய உடற்தகுதி தான், ஆனால் அதையும் இந்த ஐபிஎல் மூலம் நீக்கி விட்டார். அவருடைய கேப்டன்ஷிப் எதிர்கால இந்திய அணிக்கு மிகவும் நல்லதாக அமைந்து உள்ளது. இந்திய அணிக்கு தேவைப்பட்டால் அப்பொழுது அவர் இந்திய அணியை வழி நடத்தலாம். ஹர்திக் பாண்டியா மைதானத்திற்கு வெளியே வித்தியாசமாக உள்ளார், ஆனால் மைதானத்திற்குள் அவர் சிறந்த தலைவராகவும், அமைதியாகவும் மற்றும் மிகவும் தீவிரமாகவும், அணியை ஒழுங்கு படுத்துவதிலும் மற்றும் அணியை முன்னே கொண்டு செல்வதிலும் மும்முரமாக இருக்கிறார். மேலும் இந்த ஐபிஎல் தொடர் மூலம் ஹர்திக் பாண்டியா பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார் என்று ஹர்பஜன் சிங் ஹர்திக் பாண்டியாவை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.