ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருந்து இஷாந்த் சர்மா காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
இந்தியா அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் கட்டமாக ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு அடுத்ததாக டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கின்றன. டிசம்பர் 17ஆம் தேதி டெஸ்ட் தொடர் துவங்குகிறது. லிமிடெட் ஓவர் போட்டிகளில் காயம் காரணமாக ரோகித் சர்மா இடம்பெறவில்லை. பின்னர் டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார் என கூறப்பட்டிருந்தது.
அதேபோல் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இஷாந்த் சர்மாவின் பெயர் டெஸ்ட் தொடரில் இருக்கிறது. அவருளுக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு இருந்தது. டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக அவர் குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, இந்திய தேசிய அகடமியில் பரிசோதனை நடந்தது. அதில் குறிப்பிட்ட காலத்திற்குள் குணமடையாது என மருத்துவர்கள் குழுவால் தெரிவிக்கப்பட்டது. இதனால் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருக்கிறார்.
இவருடன் சேர்ந்து தேசிய அளவில் உடற்பயிற்சி மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்த ரோகித்சர்மா மெல்ல மெல்ல முன்னேற்றம் கண்டு வருவதினால் அவருக்கான இரண்டாவது கட்ட பரிசோதனை வருகிற டிசம்பர் 11ஆம் தேதி நடக்கிறது. இதில் அவர் குணமடைந்துவிட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவர் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ரோகித் சர்மா குணம் அடைந்துவிட்டாலும் அவர் ஆஸ்திரேலியா சென்றால் குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். அதன்பிறகு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பின்னர் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இயலும். இதற்கு போதிய காலம் இல்லாததால் அவரது பெயரும் நீக்க படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ரோகித் சர்மாவின் தனிமைப்படுத்துதல் காலத்தை 7 நாட்களாக குறைந்து கொரோனா பரிசோதனை செய்து இல்லை என உறுதி செய்த பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ தலைவர் கங்குலி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
எது எப்படியாகினும் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட செல்வாரா? மாட்டாரா? என தெரியவரும்.