அது என்னோட தப்பு தான்… நான் அப்படி செஞ்சிருக்க கூடாது; தவறை பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்ட சூர்யகுமார் யாதவ்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் வாசிங்டன் சுந்தர் ரன் அவுட்டானதற்கு தனது தவறே காரணம் என சூர்யகுமார் யாதவ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி வெறும் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சிவம் மாவியை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பின் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியும் பேட்டிங்கில் மிக கடுமையாக திணறியது.
சூர்யகுமார் யாதவ் உள்பட இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் கூட பெரிதாக ரன் குவிக்க முடியாமல் திணறியதால் கடைசி ஒரு ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை இந்திய அணி சந்தித்தது.
கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் சூர்யகுமார் யாதவ் திணறினாலும், கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தததால் 19.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை சமன் செய்தது.
இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய சூர்யகுமார் யாதவ், வாசிங்டன் சுந்தர் தேவை இல்லாமல் ரன் அவுட்டானதற்கு தனது தவறே காரணம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “வாசிங்டன் சுந்தர் தேவை இல்லாமல் ரன் அவுட்டானதற்கு நான் செய்த தவறு தான் காரணம். அந்த நேரத்தில் ரன் ஓடியிருக்க கூடாது, அது ரன் ஓடுவதற்கான பந்தும் இல்லை, நான் பந்து எந்த திசையில் இருந்து வந்தது என்பதை கூட சரியாக கவனிக்கவில்லை என்பதே உண்மை” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய சூர்யகுமார் யாதவ், “இந்த போட்டியில் அனைவரும் புதிய சூர்யகுமார் யாதவை பார்த்திருப்பீர்கள், வேறு வழியில்லை இது போன்ற போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறே விளையாட வேண்டும். கடைசி வரை ஒருவர் களத்தில் இருந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸ் இது போன்று இருக்கும் என்றும், ஆடுகளத்தின் தன்மை இவ்வாறு இருக்கும் என்றும் நாங்கள் நினைக்கவில்லை. கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தால் வெற்றி என்பதால் சற்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது, நான் கடைசி பந்தை எதிர்கொள்வதற்கு முன்பு ஹர்திக் பாண்டியா என்னிடம் வந்து இந்த பந்திலேயே போட்டியை முடித்துவிடு என்று கூறினார், அது எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது” என்று தெரிவித்தார்.