வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்; விராட் கோஹ்லி பெருமிதம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
துபாயின் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தேவ்தட் படிக்கல்(54), பின்ச் (52) மற்றும் டிவில்லியர்ஸ் (55) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பெங்களூர் அணி 201 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் முக்கிய வீரர்கள் ஏமாற்றம் கொடுத்ததால் முதல் 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 112 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
கடைசி மூன்று ஓவரில் பொலார்டு மற்றும் இஷான் கிஷானின் ருத்ரதாண்டவத்தின் மூலம் இரு அணிகள் இடையேயான இந்த போட்டி டிராவில் முடிந்தது. கீரன் பொலார்டு 24 பந்துகளில் 60 ரன்களும், இஷான் கிஷான் 58 பந்துகளில் 99 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து போடப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 7 ரன்களை மட்டுமே எடுத்ததால், பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணி அசால்டாக மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது;
பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது ரோலர் கோஸ்டர் போட்டி. மும்பை இந்தியன்ஸ் அணி மிக பொறுமையாகவும், சிறப்பாகவும் விளையாடினார். சூப்பர் ஓவரில் இரண்டு சிறந்த வீரரை களமிறக்க நினைத்தோம் அதனடிப்படையில் தான் நானும் டிவில்லியர்ஸும் களமிறங்கினோம், சூப்பர் ஓவரில் களமிறங்குவது பொறுப்பை தங்கள் மீது சுமத்தி கொள்வதற்கு சமம் இதன் காரணமாகவே நானே களமிறங்கினேன். பீல்டிங்கில் நிறைய முன்னேற்றம் தேவை. நவ்தீப் சைனி மிக அருமையாக சூப்பர் ஓவரை வீசினார். வாசிங்டன் சுந்தரும் மிகச்சிறப்பாக இன்றைய போட்டியில் செயல்பட்டார். அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட இந்த வெற்றி எங்களுக்கு உத்வேகமாக இருக்கும்” என்றார்.