ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரையும் இழந்துள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.
இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா 100 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 52 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 272 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்கிய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, ஐந்து போட்டிகள் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.
இப்போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்த கவாஜா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
அதன்பிறகு அவர் கூறியதாவது, “இங்கு சதமடித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த தொடரும் வேடிக்கையாகவே அமைந்தது. மைதானத்தின் நிலை அறிந்து ஆடினேன். மற்ற வீரர்களும் சிறப்பாக ஆடினார். மொத்தமாக இதுவொரு சிறப்பான ஆட்டமாக இருந்தது. 3வது போட்டியில் பின்ச் அற்புதமான ஆடினார். அங்கிருந்து தான் துவங்கியது. அதன்பிறகு பேட்டிங் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தார்கள். இந்திய மண்ணில் இந்தியர்களை வெல்வது கடினம். அதை நாங்கள் நிகழ்த்திவிட்டோம் மகிழ்ச்சி” என்றார்.