வங்கதேசத்துடனான போட்டியில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற வாய்ப்புள்ளதாக பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஒரு ஆட்டத்தில் குல்தீப், சஹல் பந்துவீச்சு சரியாக அமையவில்லை என்று அவர்களை குற்றம்சாட்டுவது தவறு. இனிவரும் போட்டிகளில் அவர்களின் பங்கு முக்கியமானது. அணியின் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு. இங்கிலாந்துடனான போட்டியில் நாங்கள் சில பாடங்களைக் கற்றோம். குறிப்பாக இடதுகை பேட்ஸ்மேன் இல்லாதது பெரும் குறை தான்.
அதை ரிஷப் பண்ட் பூர்த்தி செய்துள்ளார். நடுவரிசையில் அவருடையே பேட்டிங் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே 4-ஆவது வீரராக பண்ட் தொடர்வார். வங்கதேசத்துடனான போட்டியின் போது அதே மைதானத்தில் தான் களமிறங்க உள்ளோம். எனவே அணித் தேர்வில் சில மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது. கேதர் ஜாதவ் இதற்கு பதில் ரவீந்திர ஜடேஜாவும் சாஹலுக்கு பதில் புவனேஸ்வர் குமார் இன்றைய போட்டியில் ஆட வாய்ப்புகள் அதிகம்
குறிப்பாக இங்கிலாந்துடன் கடைசி கட்டத்தில் ரன்களை அள்ளி வழங்கிவிட்டோம். எனவே கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் விளையாட வாய்ப்புள்ளது.
அதிலும் புவனேஸ்வர் குமார் போன்ற வீரர் 8-ஆவது வரிசையில் ஆடுவது 5 மற்றும் 6 ஆகிய இடங்களிலும் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சுதந்திரத்தை அளிக்கும். மேலும் கீழ்நிலை வரிசையை பலப்படுத்த ரவீந்திர ஜடேஜாவும் களமிறங்க வாய்ப்புள்ளது என்றார்.
கேதர் விளையாட வாய்ப்பு மிகமிக குறைவு
இந்திய அணியில் அதிக விமர்சனங்களுக்கு தோனி – கேதர் ஜாதவ் ஜோடி ஆளாகியுள்ளது. இதில், தோனியை காட்டிலும் கேதர் ஜாதவ் மீது அதிக அழுத்தம் உருவாகியுள்ளது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 5 போட்டிகளில் களமிறங்கி வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே 52 ரன்கள் எடுத்தார். மிகவும் நிதானமாக விளையாடுகிறார். அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் தோனியுடன் சேர்ந்து அவர் விளையாடிய விதம் ரசிகர்களை பொறுமையிழக்க செய்துவிட்டது. அதனால், இன்றையப் போட்டியில் நிச்சயம் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.