காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறினார் கேதர் ஜாதவ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கேதர் ஜாதவ் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு வருடங்களாக ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளதால் மற்ற தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ரசிகர்களின் இரண்டு ஆண்டு எதிர்பார்ப்பை வீணாக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடந்த 7ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை துவங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்ற அதே உத்வேகத்தில் நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேதர் ஜாதவ் காயம் காரணமாக ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து கேதர் ஜாதவ் பூரண குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் கேதர் ஜாதவ் ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இது குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹசீ “கேதர் ஜாதவ் சென்னை அணியின் முக்கிய வீரர், அவரை இழந்துள்ளது எங்கள் அணிக்கு சற்று பின்னடைவு தான்” என்று தெரிவித்துள்ளார்.
JUST IN: Kedar Jadhav has been ruled out of #IPL2018 due to a grade 2 hamstring tear, sustained during CSK's tournament opener against MI.
— Cricbuzz (@cricbuzz) April 9, 2018
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் பிரவோவை போல் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த கேதர் ஜாதவ் விலகியுள்ளது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு தான்.
கேதர் ஜாதவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் இவருக்கான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.