ராபின் உத்தப்பாவை 6.4 கோடி கொடுத்து தக்க வைத்தது கொல்கத்தா
விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவை கொல்கத்தா அணி 6.4 கோடி ரூபாய் கொடுத்து RTM கார்டு முறையில் தக்க வைத்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில், 8 அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை எடுக்க பங்கேற்றுள்ளனர்.
இதில் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான சஹாவை 5 கோடி ரூபாய் கொடுத்து ஹைதராபாத் அணிக்கு விலைக்கு வாங்கிய நிலையில், இந்திய அணியின் மற்றொரு சீனியர் விக்கெட் கீப்பரான ராபின் உத்தப்பாவிற்கு ஏலத்தில் கடும் போட்டி ஏற்பட்டது.
தனக்கான அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணனம் செய்திருந்த உத்தப்பாவை கடும் போட்டிக்கு பின், 6.4 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி விலைக்கு வாங்க முன்வந்தது, ஆனால் கொல்கத்தா அணி RTM கார்டு முறையை பயன்படுத்தி உத்தப்பாவை தனது அணியிலேயே தக்க வைத்து கொண்டது.
ஐ.பி.எல் தொடரில் இதுவரை 149 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்தம் 3735 ரன்கள் எடுத்துள்ளார்.